சென்னை மற்றும் புறநகர், டெல்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய உயர் அதிகாரி பா.கீதா வெளியிட்ட அறிக்கையில். தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகக்கூடும் என்று தெரிவித்தார்..
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவ.16-ம் தேதி நிலவக்கூடும்..
இதுதவிர, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்..
குறிப்பாக, இன்று (நவ. 14) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்..
சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது..
நாளை (நவ.15) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது..
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால் பகுதியில் 12-20 செ.மீ. மழைப் பொழிவுஇருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அரக்கோணத்தில் உள்ள 250 பேர் அடங்கிய 10 குழுவினர் உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்..